யாழ் பல்கலைகழக கிளிநொச்சி பீட வளாகத்தில் புனரமைக்கப்பட்ட புத்த கோவிலும், மறுக்கப்படும் பிள்ளையாா் கோவிலும்

343 0

யாழ் பல்கலைகழத்தின் கிளிநொச்சி அறிவியல்நகா் பீடங்களில் சிறியளவில் பிள்ளையாா் கோவில் ஒன்றை அமைத்து வழிபடும் மாணவா்களின் முயற்சிக்கு நிர்வாகம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

இது ஒர் உயா் கல்வி நிலையத்தில் காணப்படவேண்டிய பன்மைத்துவத்தை கேள்விக்குள்ளாக்கியது எனவும் மாணவா்கள் குறிப்பிட்டுள்ளனா்.

யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகம் மீள்குடியேற்றத்தின் ஆரம்ப காலங்களில் பாரிய இராணுவ முகாமாக காணப்பட்டது.
முன்னைய அரசின் காலத்தில் இராணுவத்திடம் இருந்து மீளப்பெறப்பட்ட காணி யாழ் பல்கலைகழக நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.
குறித்த காணியில் இராணுவம் இருந்த காலத்தில் அவா்களின் வழிபாட்டுக்கு புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தது.
குறித்த புத்தர் சிலை பல்கலைகழகம் காணியை பொறுப்பேற்ற பின்னரும் அங்கு தொடர்ந்தும் காணப்பட்டு வந்த நிலையில் அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்படியாக விவசாய பீடம் பொறியியல் பீடம், மற்றும் தொழிநுட்ப பீடம் என்பன ஆரம்பிக்கபட்டு கல்வி செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சூழலில் புத்த கோவிலும் பேணப்பட்டே வந்தது.
இந்த நிலையில் சில காலங்களுக்கு முன் அங்கிருந்த புத்தர் சிலையின் தலைப்பகுதி சிலரால் சேதமாக்கப்பட்ட நிலையில் உடனடியாக பல்கலைகழக நிா்வாகம் அநுராதபுரத்தில் இருந்து புதிய புத்தர் சிலையையும், மாங்குளத்தில் இருந்து பிக்கு ஒருவரையும் அழைத்து வந்து பிரித் ஓதி மீண்டும் புத்தர் சிலையை வைத்து வழிபாட்டுக்கு ஏற்ற வகையில் எல்லா ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.
புத்த கோவிலும் புனரமைக்கப்பட்டும் உள்ளன.
எனவே சில இந்து மாணவா்கள் ஒரு மரத்தின் கீழ் பிள்ளையாா் சிலை ஒன்றை வைத்து வழிபட ஆரம்பித்துள்ளனா். அத்தோடு அங்கு ஒரு சிவன் சிலையும் மாணவன் ஒருவனால் வைக்கப்பட்டிருந்தது
இதனை அறிந்த நிர்வாகம் உடனடியாக பிள்ளையாா் சிலையை அங்கிருந்து எடுத்துச்சென்று திருமுறிகண்டி பிள்ளையாா் ஆலயத்தில் ஒப்படைக்குமாறு கூறியுள்ளது.
அதன்படியே பிள்ளையாா் சிலை முறிகண்டி பிள்ளையாா் ஆலயத்தில் ஒப்படைக்கப்பட, சிவன் சிலையை வைத்த மாணவன் அதனை எடுத்துச்சென்று பாதுகாப்பாக பல்கலைகழக வளாகத்தின் வெளியே ஒரு வீட்டில் வைத்துள்ளான்.
இதனையடுத்து மாணவா்களால் தங்களின் வழிபாட்டுக்கு நிரந்தரமாக ஆலயம் ஒன்று வரும் வரைக்கும் குறித்த பிள்ளையாா் சிலை இருந்த இடத்தில் தற்காலிகமாக வழிபடுவதற்குரிய ஏற்பாட்டை செய்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது
ஆனால் மாணவா்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் மாணவா்களால் பிள்ளையாா்சிலை வைக்கப்பட்ட இடத்தி்ல் ஏற்கனவே இருந்த சிலை போன்ற கல்லை கடவுளாக வைத்து அதற்கு கிடுகு மூலம் சிறிய கொட்டில் ஒன்றையும் அமைத்து வழிபட ஆரம்பித்துள்ளனா்.
ஆனால் தற்போது அதற்கு பல்கலைகழக நிர்வாகம் அனுமதி மறுப்புத் தெரிவித்து வருவதோடு அகற்றுவதற்கும் நிர்வாகம் முயற்சித்து வருவதாக மாணவா் தரப்பினால் தெரிவிக்கப்படுகிறது.
அது மாத்திரமன்றி சிங்கள மாணவா்கள் வழிபடுவதற்கு ஏற்ற வகையில் புத்தர் சிலை வைக்கப்பட்டு கோவிலும் புனரமைக்கப்படுகிறது ஆனால் நாங்கள் வழிப்படுவதற்கு அனுதியில்லை இது பல்கலைகழைகத்தில் இருக்க வேண்டிய பன்மைத்துவத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. என மாணவா் தரப்பு குற்றம் சாட்டுகிறது.
புத்த கோவில் இருப்பது பற்றி தங்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்றும், பௌத்த மதத்தை பின்பற்றுகின்றவா்களுக்கு அவா்களின் வழிபாட்டுக்கு அது அவசியம் என்றும் ஆனால் அதே போன்று எங்களுக்கும் எங்களுடைய மத வழிபாட்டுக்கு நிர்வாகம் ஏற்பாடு செய்யவேண்டும் எனவும் மாணவா்கள் கோருகின்றனா்.
இது தொடா்பாக அறிந்துகொள்வதற்கு யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி பொறியியல் பீட பீடாதிபதி அற்புதராஜாவை தொடா்புகொண்டு கேட்டபோது இந்த விடயம் தொடா்பில் ஊடகங்களுக்கு தான் உத்தியோகபூர்வமாக கருத்து கூற முடியாது என்றும் அதற்கு பல்கலைகழக பதிவாளருடன் தொடா்புகொள்ளுமாறும் தெரிவித்தாா்.
அதனடிப்படையில் யாழ் பல்கலைழக பதில் பதிவாளாருடன் தொடா்பினை மேற்கொண்டு மேற்படி விடயம் தொடர்பில் வினயபோது குறித்த விடயம் தொடர்பில் பல்கலைகழ நிர்வாகம் எந்த தகவலையும் இதுவரை அறியவில்லை எனத் தெரிவித்தாா்