மறைந்த ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 11 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வும் படுகொலை செய்யப்பட்ட 44 ஊடகவியலாளர்களுக்கும் நீதியான விசாரணை கோரி கவனயீர்ப்புப் போராட்டமும், மட்டக்களப்பில் நடைபெற்றன.
மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்காவுக்கு முன்னால், இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
ஊடகச் செயற்பாட்டுக்கான சுதந்திர இயக்கம், கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இணைந்து, இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நினைவு அஞ்சலி நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டடைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர் அத்துடன் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.