தமிழ்கல்விக் கழகத்தினால் நடாத்தப்பட்ட கலைத்திறன்போட்டி 2017 யேர்மனி தென்மாநிலம்.

899 0

கல்வியும் கலையும் நம்மிருகண்கள், நல் தமிழ் மொழியெங்கள் உயிராகும்.
கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியையும், எமது கலை, பண்பாடுகளையும் தமிழாலயங்கள் ஊடாகப் போதித்துவரும் தமிழ்க் கல்விக் கழகம் தனதுவளர்ச்சிப் படிகளில் மீண்டும் ஒரு அலகைப் புரட்டுகின்றது.

தமிழாலயங்களில் கல்விபயிலும் மாணவர்களுக்கு தேர்வு, தமிழ்த்திறன் போன்ற முக்கிய நிகழ்வுகளின் ஊடாக மாணவர்களின் திறனுக்கு களம் அமைத்து அவர்களின் கல்வித் திறனில் உயர்ந்து நிமிர்ந்து நிற்கும் தமிழ்க் கல்விக்கழகம், இவ்வாண்டிலிருந்து தமிழாலய மாணவர்களிடையே புதிய கலைத்திறன் என்ற போட்டியை அறிமுகம் செய்துள்ளது. அந்தவகையில் 100 க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் பயிலும் பல்லாயிரம் மாணவர்களிடையே எமது நுண்கலைகளையும், கிராமியக்கலை வடிவங்களையும் சிறுவயதிலிருந்தே அறிமுகம் செய்து பயிற்றுவித்து அவற்றைப் பாதுகாக்கும் ஒரு அற்புதமானபணிக்கான அத்திவாரம் இன்று அமைக்கப்படுகின்றது.

காவடி, கரகம், பொய்க்கால் குதிரை, கும்மிகோலாட்டம், விடுதலை நடனம்,
பரதநாட்டியம், வாய்ப்பாட்டு, விடுதலைப்பாடல், நாடகம், கூத்து போன்ற கலைகளின் திறன் இப்போட்டிகள் ஊடாக கணிக்கப்படுகின்றது. இப் போட்டியானது முதற்கட்டமாக தமிழாலயமட்டத்திலும் இரண்டாம் கட்டமாக மாநிலமட்டத்திலும் நிறைவாக நாடுதழுவிய மட்டத்தில் இறுதிப் போட்டிகளும் நடைபெறவுள்ளன.

தமிழாலயங்களின் போட்டிகள் நிறைவாகியுள்ள நிலையில் மாநிலங்களுக்கான போட்டிகள்  04.02.2017  Heilbronn  நகரில் மிகவும் சிறப்பாக ஆரம்பமாகியுள்ளன. நிகழ்வை ஆரம்பித்து வைத்து வந்தவர்களை வரவேற்ற தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு.நவரட்ணம் மனோகரன் இந்தநாள் கலைப் பிரிவின் முழுமைக்கான முயற்சியின் முதல் நாள் என்று மகிழ்வோடு குறிப்பிட்டார்.
இவ்வாரம்பநிகழ்வை
1. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளர்
திரு. யோன்பிள்ளை சிறீறவீந்திரநாதன்
2. தமிழ்ப் பெண்கள் அமைப்புப் பொறுப்பாளர்
திருமதி. வசந்தி மனோகரன்

3. தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாநிலப் பொறுப்பாளர்
திரு. கனகையா சிறீகாந்தன்

4. தமிழ்க் கல்விக் கழக நிதிப்பொறுப்பாளர்
திருமதி. மோகனா குணாளன்

5. கையில்புறோன் தமிழாலய நிர்வாகி
திரு. பாலகிருஸ்ணன் (செட்டி) அண்ணா

ஆகியோர் மங்கலவிளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்கள்.

தென் மாநிலத்திலுள்ள 20 தமிழாலயங்களிலிருந்து 225க்கு மேற்பட்டமாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டார்கள். போட்டிகளை நடுவம் செய்வதற்கு யேர்மனியிலுள்ள ஆற்றல் மிக்க கலைவல்லுனர்கள் சிறப்பாகப்பணியமர்த்தப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

மாநிலப் போட்டிகளின் வரிசையில் 05.02.2017 தென்மேற்கு மாநிலத்திற்கான போட்டிகளும் 11.02.2017 மத்திய மாநிலத்திலும் 12.02.2017 வடமத்திய மாநிலத்திலும் 25.02.2017 வடமாநிலத்திலும் நடைபெறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகச் செயலகத்திலிருந்து கலைப்பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

மாநிலப் போட்டிகள் நிறைவுபெற்றபின் 18.03.2017 சனிக்கிழமை நாடு தழுவியமட்டத்திலான இறுதிப்போட்டி யேர்மனியின் மையப்பகுதியில் நடைபெறுவதற்கான எல்லாவகையான நிர்வாகப் பொறிமுறைகளும் நிறைவாகியுள்ளதாகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் திரு.செல்லையா லோகானந்தம் (லோகன்) அவர்கள் மனநிறைவோடு குறிப்பிட்டார்.