சே குவேராவின் 50-ம் ஆண்டு நினைவு தினம் கியூபாவில் அனுசரிப்பு

391 0

பிரபல சோசலிசப் புரட்சியாளரான சே குவேரா கொல்லப்பட்ட 50-வது ஆண்டு நினைவு தினம் கியூபாவில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.
இவர் புரட்சிகளில் ஈடுபட்டதற்காக பொலியாவில் 1967-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி அரச படையினரால் கைது செய்யப்பட்டார். அடுத்த நாளே (9-ம் தேதி) அவரை பொலிவிய படையினர் கொலை செய்தனர். அவரது உடல் முதலில் பொலிவியாவின் வேலேகிரான்ட் அருகே கனடா தே அர்ரோயாவில் புதைக்கப்பட்டது. பின்னர் 1997-ம் ஆண்டு, அவரது உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு கியூபாவின் ஹவானா புரட்சி சதுக்கத்தில் விழா நடத்தப்பட்டு பின்னர் சாண்ட்டா கிளாராவில் புதைக்கப்பட்டது.
இந்நிலையில், சே குவேரா பிடிபட்டு கொல்லப்பட்ட 50-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நேற்று (8-ம் தேதி) கியூபாவில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. சே குவெராவின் உடல் அடக்கம் செய்யப்பட்டு, சிலை வைக்கப்பட்டிருக்கும் சாண்ட்டா கிளாராவில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர்.
தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்வில் கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோ மற்றும் பல பள்ளிக் குழந்தைகள் கலந்து கொண்டனர். அவரது கல்லறையில் ஒரு வெள்ளை ரோஜாவை ரவுல் காஸ்ட்ரோ வைத்து அஞ்சலி செலுத்தினார். அங்கு கூடிய அனைத்து பொதுமக்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

Leave a comment