ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி: தமிழக முதலமைச்சர் அறிவிப்பு

355 0

ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அருணாசல பிரதேசத்தில் இந்தியா-சீன எல்லைப்பகுதியில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கான பொருட்களை ஏற்றிக்கொண்டு விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ-17 ரக ஹெலிகாப்டர் ஒன்று நேற்று காலையில் சென்று கொண்டிருந்தது. இந்த ஹெலிகாப்டரில் 2 விமானிகள் உள்பட 5 விமானப்படை வீரர்களும், 2 ராணுவ வீரர்களுமாக 7 பேர் இருந்தனர்.

சீன எல்லையோரம் அமைந்துள்ள தவாங் நகருக்கு அருகே உள்ள கரிமுராவில் இருந்து புறப்பட்ட இந்த ஹெலிகாப்டர் சுமார் 6.30 மணியளவில் திடீரென விழுந்து நொறுங்கியது. இந்த கோர சம்பவத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மண்ணெண்ணெய் கொண்டு சென்ற போது இந்த விபத்து நேரிட்டது என தகவல்கள் வெளியாகி உள்ளன. எல்லையில் உள்ள பகுதிகளுக்கு வழங்க ஏற்றி செல்லப்பட்டு உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹெலிகாப்டர் 17 ஆயிரம் அடி உயரத்தில் வெடித்து சிதறி உள்ளது. அப்போது ஹெலிகாப்டரில் இருந்து ஒருவர் கீழே குதித்து தப்பிக்க முயற்சி செய்து உள்ளார், ஆனால் உயிர்பிழைக்கவில்லை. இந்தியா – சீனா எல்லையில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் பகுதியில் விபத்து நேரிட்டு உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த தமிழக ராணுவ வீரர் பாலாஜியின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ராணுவ வீரர் பாலாஜியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து கொண்டுள்ளார். நிதியுதவியை உடனடியாக வழங்கவும் முதல் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a comment