கட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப எடப்பாடி பழனிசாமிக்கு புதிய டெலிவி‌ஷன்

5001 0

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினர் புதிதாக நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி தொடங்க முடிவு செய்துள்ளனர். இதற்கான பொறுப்பு அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயா டி.வி., டி.டி.வி.தினகரன் கட்டுப்பாட்டில் இருக்கிறது.கட்சி சார்ந்த தகவல்களை அறிந்து கொள்ள இந்த பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியைத்தான் தொண்டர்கள் பார்க்கிறார்கள்.

ஆனால் டி.டி.வி.தினகரன் தொடர்பான செய்திகள் மட்டுமே வெளியிடப்படுகிறது. அரசு திட்டங்கள், எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி பற்றிய செய்திகளை தவிர்த்து விடுகின்றனர்.

இதனால் எடப்பாடி அணியினர் தங்களை பற்றிய தகவல்களை தொண்டர்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியாமல் திணறுகின்றனர்.

எனவே புதிதாக நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி தொடங்க முடிவு செய்துள்ளனர். இதற்கான பொறுப்பு எடப்பாடியின் நம்பிக்கைக்குரிய அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பாண்டியராஜன் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து கொடுத்துள்ளார்.

டி.வி., நாளிதழுக்கு பெயர் சூட்டுவது தொடர்பாக விவாதித்தனர். அப்போது 10 பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் எந்த பெயரையும் முடிவு செய்யவில்லை.எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது பெயர் இடம் பெறும் வகையில் புதிய பெயரை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

நாளிதழ் மற்றும் டி.வி. தொடங்குவதற்கு லைசென்சு பெறுவது தொடர்பான பணிகளும் நடந்து வருகிறது.வருகிற 6-ந்தேதி இரட்டை இலை தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் வருகிறது. தற்போது இரட்டை இலை சின்னத்தை பெறுவதில் தீவிரமாக இருப்பதால் 6-ந்தேதிக்கு பிறகு டி.வி. தொடங்குவதற்கான பணிகள் தீவிரமடையும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a comment