சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு எதிரான கொழும்பை நோக்கிய வாகனப் பேரணி வவுனியா புதிய பேரூந்து தரிப்பிடத்திலிருந்து………….(காணொளி)

287 0

சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு எதிரான வாகனப் பேரணி இன்று காலை வவுனியா புதிய பேரூந்து தரிப்பிடத்திற்கு முன்னிருந்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவர் வைத்தியர் எம்.எம்.அனஸ் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிராக முன்னெடுத்த ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக வவுனியாவில் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததுடன், ஆர்ப்பாட்டப் பேரணியானது ஏ9 வீதியில் ஆரம்பமாகி மன்னார் வீதி வழியாக குருமன்காட்டை சென்றடைந்து அங்கிருந்து புகையிரத வீதி வழியாக வவுனியா மணிக்கூட்டு கோபுரத்தை அடைந்து, கொழும்பை நோக்கி வாகனப்பேரணியானது புறப்பட்டு சென்றது.

சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு எதிரான பேரணிக்கு வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம், மற்றும் வவுனியா பொது அமைப்புக்கள் என்பன ஆதரவு வழங்கியிருந்தனர்.

குறித்த பேரணியானது கொழும்பை நோக்கி செல்கையில் இடையிலுள்ள ஆதார வைத்தியசாலை அதிகாரிகளும் இணைந்து செல்லவுள்ளதாக தெரியவருகிறது.

சைட்டத்திற்கு எதிரான வாகனப்பேரணியானது யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து இரண்டாவது நாளாக இன்று வவுனியாவை வந்தடைந்து இன்று வவுனியாவில் இருந்து ஆனுராதபுரம் சென்றதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவர் வைத்தியர் எம்.எம்.அனஸ் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் கொடுக்கும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனவும் இப் போராட்டம் மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவே நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Leave a comment