தொழில் வாய்ப்புக்கள் இன்மையால் இளம் சமூகம் விரக்தியில்!

267 0

தொழில் வாய்ப்புக்கள் இன்மையால் இளம் சமூகம்  விரக்தியில் காணப்படுகிறது – சமத்தும் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் சந்திரகுமாா்

 கிளிநொச்சி மாவட்டத்தில் பெருமளவான இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்பின்மையால் கடும் விரக்தியான மனநிலையில் காணப்படுகின்றனா் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,சமத்தும் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் மு. சந்திரகுமாா் தெரிவித்துள்ளாா்.
கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தில் இடம்பெற்ற விளையாட்டுக்கழக இளைஞர்களை சந்தித்து கலந்துரையாடிய போது அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.  மேலும் தெரிவிக்கையில்
 மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கும் சென்று மக்களையும் இளைஞர் யுவதிகளையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்றேன். கடந்த சில மாதங்களாக நான் சந்திக்கின்ற இளைஞர் யுவதிகள் அனைவரும் தொழில் வாய்ப்பின்றி மிகவும் விரக்கதியான மனநிலையில் காணப்படுவதனை அவா்களின் பேச்சுக்கள் மூலம் வெளிப்படுகிறது.தொழில் வாய்ப்பின்மையால் தங்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது என்ற பெரும் ஏக்கம் அவா்களை மனதளவில் வதைக்கிறது. இதனை இங்கும் உங்களின் பேச்சுகளிலிருந்தும் அறிந்துகொள்கிறேன். எனத் தெரிவித்த அவா்
இளம் சமூகத்தின் இந்த மனநிலை மிகவும் மோசமானது இது நாட்டுக்கும் இந்த சமூகத்திற்கும் ஆரோக்கியமானதல்ல, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இளம் சமூகத்தின் பங்களிப்பு முக்கியமானது ஆனால்  எங்களுடைய பிரதேசங்களில் இளம் சமூகத்தினர் தொழில் வாய்ப்பின்றி இருப்பது துரதிஸ்டவசமானது.  கடந்த காலங்களில் பெரும்மளவான சிங்களவர்கள் வடக்கு மாவட்டங்களில் வந்து தொழில் செய்தனா் ஆனால் இன்று பெருமளவு தமிழ் இளைஞர்கள் கொழும்பு  உள்ளிட்ட தென்பகுதி பிரதேசங்களுக்குச் சென்று தொழில் புரிகின்றனா்.அதுவும் குறைந்த கூலியுடன் கடினமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலையை கடந்த காலத்தில் கொண்டு வருவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான காணியும் வழங்கிய போது  தூரநோக்கற்ற சில அரசியல் தரப்புக்களால் எம் மீது அவதூறு பரப்பட்டது. சிங்களவா்களுக்கு காணி வழங்குவதாக பொய் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.  ஆனால் இன்று நிலைமையை சிந்தித்து பாருங்கள் சுமார் ஜயாயிரம் வரையிலான யுவதிகள் அங்கு பணியாற்றுகின்றனர் இதனால் அவா்களின் வீட்டில் மூன்று வேளையும் அடுப்பு எரிகிறது.எனவும் குறிப்பிட்ட  அவா்
இது போன்ற பல தொழிற்சாலைகள் கிளிநொச்சிக்கு கொண்டுவரப்படவேண்டும், அதற்கு அதிகாரத்தில் உள்ள அரசியல் தரப்புக்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், தகுதியுள்ள புலம் தமிழர்களை முதலிடுமாறும் அதற்கான வசதிவாய்ப்புக்களையும் ஏற்படுத்தி கொடுப்பதற்கு  அதிகாரத்தில் உள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அரசாங்கத்தின் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டாா்.
இளம் சமூகத்தில் தொழில் வாய்ப்பின்மையால்  காணப்படுகின்ற விரக்தியான மனநிலை பல்வேறு சமூக சீரழிவுகளையும், சமூகவிரோத செயல்களையும் ஊக்குவிப்பதாகவே அமையும் எனவே அவற்றை கருத்தில் எடுத்து  செயற்படவேண்டும் எனவும் தெரிவித்தாா்.

Leave a comment