கென்யா: அதிபர் மறுதேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறும் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

30482 0

கென்யா அதிபர் பதவிக்கான மறுதேர்தல் வருகிற அக்டோபர் 17 தேதி நடத்தப்படும் என அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் உகுரு கென்யட்டா அதிபராக பதவி வகித்தார். அவரது பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி அங்கு அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் அதிபர் கென்யட்டா மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சி சார்பில் ரெய்லா ஒடிங்கா களம் இறங்கினார்.

இதையடுத்து, நடந்த வாக்கு எண்ணிக்கையில் அதிபர் கென்யட்டா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்க்கட்சி வேட்பாளர் ஒடிங்கா ஏற்கவில்லை. தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறினார். அதை தொடர்ந்து கென்யா தலைநகர் நைரோபி, கிசுமு, கிபேரா உள்ளிட்ட பல நகரங்களில் கலவரம் மூண்டது.

தேர்தல் முடிவுகளை எதிர்த்து ஒடிங்கா கடந்த மாதம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தேர்தலில் அதிபர் வென்றதாக வெளியான முடிவுகள் பொய் எனவும் தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, ஒடிங்கா தொடர்ந்த வழக்கு மீது தீர்ப்பளித்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம், கென்யட்டா வெற்றி பெற்றது செல்லாது. 60 நாட்களுக்குள் அதிபர் தேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, வருகிற அக்டோபர் 17ம் தேதி அதிபர் தேர்தல் நடத்தப்படும் என கென்யாவின் தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave a comment