இறுதி போரில் கைதானவர்களுக்கு எதிராக ஜகத் ஜயசூரிய குற்றமிழைத்தார் – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

311 0

இறுதி போரில் கைதானவர்களுக்கு எதிராக ஜகத் ஜயசூரிய குற்றமிழைத்தார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இறுதிப் போரின்போது இடம்பெற்ற சில குற்றங்களுடன் ஜகத் ஜயசூரிய தொடர்புபட்டுள்ளதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

அவை தொடர்பில் சட்டரீதியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின் சாட்சியமளிக்க தாம் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இராணுவத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஜனாதிபதியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரும் இடமளிக்க மாட்டார்கள் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜகத் ஜயசூரிய மட்டுமல்ல அனைத்து இராணுவத்தினரின் பாதுகாப்புக்காக அரசாங்கம் நிபந்தனைகளின்றி முன்னிற்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக சாட்சியமளிக்கத் தயார் என சரத் பொன்சேகா கூறியுள்ளாரே என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மஹிந்த அமரவீர,

ஜனாதிபதி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்ற அடிப்படையிலேயே தமக்கு கருத்து வெளியிட முடியும் எனக் கூறியுள்ளார்.

Leave a comment