அனிதா தற்கொலை எதிரொலி: சென்னை அண்ணாசாலையில் மறியல் போராட்டம்

456 0

மாணவி அனிதா தற்கொலையில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சென்னை அண்ணாசாலையில் மறியல் போராட்டம் நடந்தது. மெரினாவிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

‘நீட்’ தேர்வு விவகாரத்தில் அரியலூர் மாணவி அனிதா நேற்று தற்கொலை செய்துகொண்டதையடுத்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது.

சென்னையில் திராவிடர் மாணவர்கள் கழகத்தை சேர்ந்த ஒரு மாணவி உள்பட 15 மாணவர்கள் நேற்று மாலை சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக வந்தனர்.

போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால், அவர்கள் அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலை முன்பு சாலைமறியல் போராட்டத்தில் குதித்தனர். அப்போது நீட் தேர்வை கொண்டு வந்த மத்திய, மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை அவர்கள் எழுப்பினர். சாலைமறியல் போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் 15 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம். எனவே இதனை கண்டித்து மாபெரும் போராட்டம் நடத்த மாணவ-மாணவிகள் பெருந்திரளாக மெரினா கடற்கரையில் குவிய வேண்டும் என்று ‘வாட்ஸ்-அப்’ மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின.

இதையடுத்து மெரினா கடற்கரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டக்காரர்கள் யாரும் நுழைந்துவிடாத வகையில் மெரினா கடற்கரை பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். மேலும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மக்கள் அதிகாரம் மையம் அறிவித்துள்ளது.

எனவே மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Leave a comment