திலக் மாரப்பன – சுஷ்மா சுவராஜ் – இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சு

245 0

இந்து சமுத்திர பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க இலங்கை விஜயம் செய்துள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 

கொழும்பு நகரில் இரண்டாவது இந்து சமுத்திர மாநாடு இடம்பெற்று வருகிறது. இந்து சமுத்திர பிராந்தியத்தில் உள்ள நாடுகள் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளன. இந்த நிலையில், இந்து சமுத்திர மாநாட்டிற்கிடையே, சுஷ்மா சுவராஜ் வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, இரு தரப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தலைவர்களின் சந்திப்பு குறித்து இலங்கை வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், “வளர்ச்சி மற்றும் சுபிட்சத்துக்கான கூட்டு இதுவாகும்.

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், திலக் மாரப்பனவுடன் இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதேபோல், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மாரப்பனவுடன் முக்கிய விவகாரங்கள் குறித்து சுஷ்மா சுவராஜ் ஆலோசனை நடத்தியதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோரை சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசினார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கை பயணம் செய்ததை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் 76 தமிழக மீனவர்களை இலங்கை அண்மையில் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment