யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் 6 மாணவர்கள் பலி(காணொளி)

402 0

யாழ்ப்பாணம் மண்டைதீவை அண்மித்த சிறுத்தீவு கடற்பரப்பில் பயணம் செய்த படகு கவிழ்ந்ததில் 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

கல்வி பொதுத் தரா தர உயர் தரப் பரீட்சையின் பிரதான பாடங்கள் நிறைவடைந்த நிலையில், குறித்த மாணவர்கள் படகு சவாரி செய்ய முற்பட்ட போது, படகு கவிழ்ந்து விபத்துள்ளானது. படகு விபத்திற்குள்ளானதை தொடர்ந்து கரையொதுங்கிய மாணவன் வழங்கிய தகவலின் அடிப்படையில், ஏனைய 6 மாணவர்களும் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

கரையொதுங்கிய மாணவன் யாழ்ப்பாணம் குருநகர் மீனவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார். அதனைத்தொடர்ந்து யாழ்ப்பாணம் குருநகர் மீனவர்களால் மண்டைதீவு கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டது. எனினும் சம்பவ இடத்திற்கு கடற்படையினர் வருகை தருவதற்கு முன்னதாக, யாழ்ப்பாணம் குருநகர் மீனவர்கள், மிகுந்த போராட்டத்தின் மத்தியில், பாதுகாப்பு அங்கிகள் இல்லாத நிலையில், 4 மாணவர்களை சடலங்களாக மீட்டனர். அதனைத்தொடர்ந்து ஏனைய இரு சடலங்களும் கடற்படையினரால் மீட்கப்பட்டது. இதில் மூன்று மணி நேர தேடுதலின் பின்னர் ஆறாவது இளைஞனின் சடலம் மீட்கப்பட்டது.

யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவர்களான சின்னத்தம்பி நாகசுலோசன், லிங்கநாதன் ரஜீவ் மற்றும் ஜெயசாந்த் தினேஸ், யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் தேவகுமார் தனுரதன், யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலய மாணவன் கோணேஸ்வரன் பிரவீன் மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவன் தனுஷன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். நண்பன் ஒருவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, 18 மாணவர்கள் யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்கரைக்கு சென்ற வேளை இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இதில் 7 பேர் படகில் பயணம் செய்த படகு கவிழ்ந்ததில், 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் உயிர் தப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6 சடலங்களும் யாழ் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு ஒப்படைக்கப்பட்டிருப்பதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிகவிசாரணைகளை கடற்படையினருடன் இணைந்து ஊர்காவற்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து ஏனைய 12 பேரும், வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பின்னர் உயிரிழந்த 6 பேரின், உறவினர்களிடமும் பொலிஸாரால் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது.

இந்நிலையில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், சம்பவ இடத்திற்கு சென்று நிலைமைகள் தொடர்பில் பொலிசாருடன் ஆராய்ந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment