வடமாகாணத்திற்கு புதிய அமைச்சர்கள் இருவர் நியமனம்

212 0

வடமாகாண சுகாதாரம் மற்றும் விவசாய அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட சிவநேசன் மற்றும் குணசீலன் ஆகியோர் வடமாகாண ஆளுநர் முன்னிலையில் இன்று சத்தியபிரமாணம் செய்து அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுக் கொண்டனர். 

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்றையதினம் (23.08) அமைச்சுப் பதவிகள் பொறுப்பேற்கும் நிகழ்வு இடம்பெற்றது.

வடமாகாண விவசாயம், நீர்ப்பாசனம், கால்நடை, மீன்பிடி, நீர் வழங்கல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக புளொட் அமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் சத்தியப்பிரமணம் செய்து பொறுப்பேற்றார்.

சுகாதாரம், சுதேச மருத்துவம், சிறுவர் விவகார அமைச்சராக ரெலோ அமைப்பின் மன்னார் மாவட்ட மாகாணசபை உறுப்பினர் வைத்தியக் கலாநிதி ஞானசீலன் குணசீலன் சத்தியப்பிரமணம் செய்து பொறுப்பேற்றார்.

இதற்கு மேலதிகமாக வடமாகாண முதலமைச்சருக்கு நிதி, திட்டமிடல், சட்டம் மற்றும் ஒழுங்கு, காணி, மின்சாரம், வீடமைப்பு மற்றும் புனரமைப்பு, சுற்றுலா, உள்ளுராட்சி, மாகாண நிர்வாகம், நகர அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, போக்குவரத்து, மோட்டார் போக்குவரத்து உள்ளிட்ட அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதேவேளை வடமாகாண பெண்கள் விவகாரம், புனர்வாழ்வு, சமூக சேவை, கூட்டுறவு, வர்த்தக வாணிபம், உணவு வழங்கல் விநியோகம், சிறுதொழில் முயற்றி ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக வாணிப அமைச்சராக அனந்தி சசிதரனும், வடமாகாண ஆளுனர் முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்து தமது அமைச்சுக்களை பொறுப்பேற்றுக்கொண்டனர்

Leave a comment