2019 உலகக்கிண்ணம் வரை பதவி விலக மாட்டேன் – சுமதிபால

3703 0

2019 உலகக்கிண்ணம் வரை தான் பதவி விலகப் போவதில்லை என இலங்கை கிரிக்கட் சபை தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

முன்னாள் அணித்தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க கிரிக்கட் சபை தொடர்பில் தெரிவித்திருந்த கருத்தை தொடர்ந்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி தற்போது மிகவும் மோசமான கட்டத்தில் உள்ளதாகவும் இதற்கு அணிவீரர்களை மட்டும் குற்றம் சுமத்தமுடியாது எனவும் இலங்கை கிரிக்கட் சபை பொறுப்பு கூற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்த அரஜுன ரணதுங்க இலங்கை கிரிக்கட் சபை தலைவர் பதவி விளக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த திலங்க சுமதிபால தான் ஐ.சி.சி. இற்கு செல்வதற்கான எந்த யோசனையும் இல்லை எனவும் அடுத்த தேர்தல் வரை தனது பதவியிலிருந்து இலங்கை கிரிக்கெட் சபையுடனே சேவையாற்றவிருப்பதாகவும், 2019 உலகக்கிண்ணம் வரை பதவி விலகப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016 ம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் சபை தேர்தலில் அர்ஜூன ரணதுங்க, நிஷாந்த ரணதுங்க ஆகியோரைத் தோற்கடித்து வெற்றி பெற்ற திலங்க சுமதிபால இலங்கை கிரிக்கட் சபை தலைவராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment