தமிழக கோவில்களை சிதைப்பதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை – மு.க.ஸ்டாலின் 

238 0

தமிழக கோவில்களை சிதைப்பதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மக்களின் தாகத்தைத் தணிப்பதற்கான குடிநீரைக் கூட முறையாக வழங்கும் நிர்வாகத் திறனற்றதாக உள்ள தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு, பாரம்பரியச் சின்னங்களான கோவில்களை பராமரிப்பதிலும் அலட்சியம் காட்டி, தமிழர்களின் பெருமை மிக்க வரலாற்று அடையாளங்களைச் சிதைத்து வருவதை ஐ.நா. அவையின் யுனெஸ்கோ அமைப்பு வெளியிட்ட இடைக்கால அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

திருப்பணி என்ற பெயரில் அறநிலையத்துறை மேற்கொள்ளும் அலட்சியமான செயல்களால் கோவில்கள் சிதைக்கப்படுகின்றன, என வரலாற்று ஆர்வலர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை தருமாறு யுனெஸ்கோ அமைப்பிடம் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியதன் காரணமாக, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில், காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவில், கும்பகோணம் நாகேசுவரன் கோவில் உள்ளிட்ட 10 கோவில்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 300 பக்க அளவிலான இடைக்கால அறிக்கையை நீதிமன்றத்தில் அளித்துள்ளது.

இந்த நிலையில், தமிழக கோவில்களை சிதைப்பதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment