பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டானாவ் தீவில் சுமார் இரண்டரை கோடி மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு இராணுவ சட்டம் அமலில் இருக்கும் சூழலில், இந்த தீவில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக ஐ.எஸ். இயக்கத்தினரின் ஆதரவு பெற்ற பயங்கரவாத இயக்கம் ஒன்று இந்த தீவை வெளிநாட்டு பயங்கரவாதிகளின் இடமாக மாற்ற முயன்று வருகிறது.
எனவே இந்த பயங்கரவாதிகளுக்கு எதிராக உள்ளூரை சேர்ந்த மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணி என்ற பிரிவினைவாத இயக்கத்தினர் போரிட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு பிலிப்பைன்ஸ் அரசும், இராணுவமும் ஆதரவு அளித்து வருகின்றன.
இது தொடர்பாக அரசுக்கும், இந்த முன்னணியினருக்கும் இடையே ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மகுயின்டானாவ் பகுதியில் உள்ள 2 கிராமங்களில் கடந்த 7ஆம் திகதி பயங்கரவாதிகள் நாட்டு வெடிகுண்டுகளால் தாக்குதல் நடத்தினர்.
இதில் மில்ப் போராளிகள் 5 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு இராணுவத்தினரின் உதவியுடன் மில்ப் படையினர் பதிலடி கொடுத்ததால் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
கடந்த 6 நாட்களாக நடந்த இந்த மோதலில் 20 பயங்கரவாதிகள் உள்பட 25 பேர் கொல்லப்பட்டதாக இராணுவம் தெரிவித்து உள்ளது.

