அமெரிக்க தீவை தாக்க 4 ஏவுகணைகள் தயார்: வடகொரியா அறிவிப்பு

331 0

அமெரிக்காவுக்கு சொந்தமான குயாம் தீவை தாக்க நான்கு ஏவுகணைகள் தயார் நிலையில் இருப்பதாக வடகொரிய நாட்டு ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

வடகொரியாவும், அதன் அருகே உள்ள தென்கொரியாவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. இதில் தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.எனவே அமெரிக்காவை மிரட்டும் வகையில் வடகொரியா அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனை போன்றவற்றை தொடர்ந்து நடத்தி வருகிறது.

இதனால் சமீபத்தில் வடகொரியா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை விதித்தது. இது வடகொரியாவுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.ஜப்பானையொட்டி அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் என்ற தீவு உள்ளது. இந்த தீவை தாக்கப்போவதாக வடகொரியா அறிவித்தது. குவாம் தீவு வடகொரியாவில் இருந்து 3356 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இது 541 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகும். இதில் 1 லட்சத்து 63 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள்.

இந்த தீவு அமெரிக்காவின் முக்கிய ராணுவ தளமாகவும் உள்ளது. தீவின் கால் பங்கு பகுதியை ராணுவ தளமாக பயன்படுத்துகின்றனர். 6 ஆயிரம் பேர் கொண்ட வலுவான விமானப்படையும் அங்கு உள்ளது.

குவாம் தீவை தாக்கப்போவதாக வடகொரியா அறிவித்தது. அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் ஆத்திரம் அடைந்தார். நியூஜெர்சியில் ஓய்வு எடுத்து வரும் அவர் வடகொரியாவை கடும் எச்சரித்தார்.அமெரிக்காவை அச்சுறுத்தும் வகையில் இனிமேலும் வடகொரியா நடந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. இல்லை என்றால் உலகம் இதுவரை சந்திக்காத தீக்கனலையும், சீற்றத்தையும் சந்திக்க வேண்டியது வரும் என்று கூறினார்.

அதாவது வடகொரியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா தயாராகிவிட்டது போல டிரம்புடைய பேச்சு இருந்தது.ஆனாலும் இந்த அச்சுறுத்தலை வடகொரியா கண்டுகொள்ளவில்லை. குவாம் தீவில் தாக்குதல் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த நாட்டு அரசு பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் வடகொரியா குவாம் தீவில் தாக்குதல் நடத்துவதற்காக ஹவாசாங்-12 வகையை சேர்ந்த 4 ஏவுகணைகளை தயார்படுத்துவதாகவும் இதற்கு அதிபர் கிம்ஜாங்உன் உத்தரவிட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஏவுகணைகள் இன்னும் 4 நாட்களில் தயாராகிவிடும். அதன்பிறகு எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தப்படும் என்று ராணுவ தளபதி கிம் ராக் கயாம் தகவலை மேற்கோள் காட்டி கூறியிருக்கிறது.

எனவே வடகொரியா தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தில் குவாம் மக்கள் உள்ளனர். அமெரிக்கா ராணுவ மந்திரி ஜிம்மேட்டில் தற்போது குவாம் தீவில் இருக்கிறார்.அவர் இதுபற்றி கூறும்போது, வடகொரியாவின் அச்சுறுத்தல் சாதராணமானது தான். உடனடி தாக்குதல் நடத்துவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. அமெரிக்கா மக்கள் நிம்மதியாக தூங்கலாம் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே வடகொரியாவின் நட்பு நாடான சீனா இரு நாட்டு தலைவர்களையும் அமைதி காக்கும்படியும், ஆத்திரமூட்டும் தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a comment