மேகங்கள் சூழ்ந்ததால் சந்திர கிரகணத்தை பார்க்க முடியாமல் மக்கள் ஏமாற்றம்

224 0

வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் சந்திர கிரகணத்தை பார்க்க முடியாமல் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது “சந்திர கிரகணம்” ஏற்படுகிறது. இந்தியாவில் கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் 11-ந்தேதி ஒரு பகுதி சந்திர கிரகணம் தெரிந்தது.

இந்த நிலையில் 6 மாத இடைவெளிக்குப் பிறகு இந்தியாவில் நள்ளிரவு இரவு சந்திர கிரகணம் நிகழந்தது. இந்த சந்திர கிரகணத்தை ஆசியா கண்டத்தில் உள்ளவர்களும், ஆஸ்திரேலியர்களும் முழுமையாக காண முடிந்தது.

இன்றிரவு ஏற்படும் சந்திர கிரகணம் சரியாக 10.53 மணிக்கு பிடிக்கத் தொடங்கியது. நள்ளிரவு 12.48 மணி வரை சந்திர கிரகணம் நீடித்தது. அதாவது இந்தியாவில் சரியாக 1 மணி நேரம் 55 நிமிடங்களுக்கு சந்திர கிரகணம் நீடித்தது. சந்திர கிரகணத்தின் போது நிலா 75 சதவீதம் வெளிச்சமாகவும், 25 சதவீதம் இருளாகவும் இருந்தது.

இதனிடையே, வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் சந்திர கிரகணத்தை பார்க்க முடியாமல் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்பமையம் தெரிவித்து இருந்தது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் 10.30 மணி முதலே மக்கள் கிரகணத்தை காண காத்திருந்தனர். ஆனால் நிலாவை மேகங்கள் முழுவதுமாக மறைத்து இருந்தது.

இதனால் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் கிரகணத்தை பார்க்க முடியவில்லை. இருப்பினும் சென்னை பிர்லா கோளரங்கத்தில் ஏராளமான மக்கள் சந்திர கிரகண நிகழ்வை கண்டு ரசித்தனர்.

Leave a comment