பிலிப்பைன்சில் 7 தொழிலாளர்களை கடத்தி தலை துண்டித்த தீவிரவாதிகள்

233 0

பிலிப்பைன்ஸ் நாட்டில் மரம் வெட்டு தொழிலாளர்கள் ஏழு பேரின் தலையை துண்டித்து தீவிரவாதிகள் வெறிச்செயலில் ஈடுபட்டனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் தீவிரவாதிகள் ஆதிக்கம், போதை பொருள் கடத்தல் கும்பலின் அட்டகாசம் உள்ளது. அவர்களை ஒடுக்க புதிய அதிபர் ரோட்ரிகோ டியூட்ரெட் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் பிலிப்பைன்சில் உள்ள அபு சாயப் என்ற தீவிரவாத கும்பல் சமீபத்தில் மரம் இழுக்கும் தொழிலாளர்களை கடத்தி சென்றது. அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

இதற்கிடையே அவர்களில் 7 பேர் தலை துணடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் பேசிலான் தீவில் உள்ள ஒரு மலை கிராமத்தில் கிடந்தனர்.

அவர்களின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அபுசயாப் தீவிரவாதிகள் பொதுமக்களை கடத்தி பிணைக் கைதிகளாக்கி பணம் பறித்து வருகின்றனர்.

ஆனால் கடத்தப்பட்ட தொழிலாளர்களுக்கு பிணைத் தொகை எதுவும் கேட்கவில்லை. எனவே படுகொலை செய்ததற்கான காரணம் தெரியவில்லை.

இதற்கிடையே வெளிநாடுகளை சேர்ந்த 20 பேரை அபுசயாப் தீவிரவாதிகள் கடத்தி பிணைத் தொகை கேட்டு மிரட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்களை பாசிலின் மற்றும் கலு தீவுகளில் அடைத்து வைத்திருப்பதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

Leave a comment