எதிர்க்கட்சிகள் குழப்பம் – கைபேசியில் படம் பிடித்த பாஜக உறுப்பினருக்கு சபாநாயகர் எச்சரிக்கை

4285 0
மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளியை கைபேசியில் படம்பிடித்த பாஜக உறுப்பினருக்கு அனுராக் தாக்குருக்கு, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து அவர் அவையில் வருத்தம் தெரிவித்தார்.
மக்களவையில் கடந்த 24ஆம் திகதி பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடத்தப்படும் வன்முறைகள் குறித்து எதிர்க்கட்சியினர் உரையாற்றினர்.
அதன்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் அவையின் மையப் பகுதிக்கு சென்று கோஷமிட்டனர்.
அங்கிருந்த ஊழியர்களின் மேசைகளில் இருந்து சில தாள்களை எடுத்து கிழித்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இருக்கையை நோக்கி வீசினர்.
இதையடுத்து அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் 6 பேரை 5 நாள் தடைசெய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதற்கிடையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியை, உறுப்பினர் அனுராக் தாக்குர் தன்னுடைய கைபேசியில் படம் பிடித்தார்.
இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அனுராக் மீது நடவடிக்கை எடுக்க கோரி சபாநாயகருக்கு கடிதம் அனுப்பினார்.
இந்த நிலையில் மக்களவை நேற்று பிற்பகல் மீண்டும் கூடியபோது, சபாநாகர் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து அனுராக் தாக்கு அவையில் வருத்தம் தெரிவித்தார்.

Leave a comment