மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முறைப்பாடு

199 0

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெறுவதாக தெரிவிக்கப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இன்று புதன்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெறுவதாக தெரிவிக்கப்படும் ஊழல் தொடர்பிலான பல்வேறு தகவல்கள் ஊடகங்களில் வெளியாகிவரும் நிலையில் அது தொடர்பில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

குறித்த ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பிலான செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் அது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய உறுப்பினர்கள் மூவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டு விசாரணை மேற்கௌ்ளப்பட்டுளளது.

இந்த நிலையில் மாவட்ட செயலகம் தொடர்பில் ஊடகங்களில் வெளிவந்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முழுமையான விசாரணையை நடாத்தி உண்மைத்தன்மையினை வெளிப்படுத்துமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார், செயலாளர் எஸ்.நிலாந்தன் ஆகியோர் இன்று இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு சென்று முறைப்பாட்டினை பதிவுசெய்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஐந்து வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் அவற்றில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் முறைகேடுகள் பட்டியலிடப்பட்டு அது தொடர்பான ஆவணங்களும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a comment