காணிவிடுவிப்பு போராட்டத்தில் அரசியல் தலையீடு இல்லை

234 0

காணி விடுவிப்புக்கு நிதிகோரிய இராணுவம் நிதியை பெற்று தமது நிலைகளை பலப்படுத்தி கொண்டு காட்டுப்பகுதிகளை மீளகையளித்துள்ளதாக கேப்பாபுலவு மக்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.

கேப்பாபுலவு மக்களின் தொடர் நில மீட்பு போராட்டம் இன்று 146 ஆவது நாளை எட்டியுள்ளது.138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த தொடர் போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில் தமது போராட்டத்தில் அரசியல் தலையீடுகள் காணப்படுவதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் குறிப்பிட்டிருந்ததாகவும் எனினும் அவ்வாறானதொரு அரசியல் தலையீடுகள் தமது போராட்டத்தில் இல்லை எனவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்ற மக்கள், 2012 ஆம் ஆண்டு சொந்த நிலங்களிலிருந்து மீள்குடியேற்றம் செய்யப்படப்போவதாக தெரிவித்துவற்றாப்பளை மாகாவித்தியாலயத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் மக்கள் சொந்த நிலத்திற்கு செல்லவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த நிலையில்மாதிரிக்கிராமங்கள் அமைக்கப்பட்டு மக்கள் அங்கு மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.

எனினும் கடந்த எட்டு வருடங்களாக சொந்த நிலத்திற்கு செல்வதற்காக தொடர் கவனயீர்ப்பு போராட்டங்கள் மற்றும் உண்ணாவிரத போராட்டங்களை மேற்கொண்ட போதிலும் போலி வாக்குறுதிகள் வழங்கப்பட்டு அவை தடுத்து நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில்தான் கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டம் தீர்வின்றிய நிலையில் ஐந்தாவது மாதமாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

Leave a comment