எம்மை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் அரசாங்கம்! – சி.வி.விக்னேஸ்வரன்

409 0

113913049Untitled-11முன்னைய அரசாங்கம் வெளிப்படையாகத் தரமாட்டோம் என்றது. தற்போதைய அரசு எல்லாம் தருவோம் என காலத்தை இழுத்தடிப்பது மட்டுமல்லாமல் சில யுக்திகளையும் கையாள்கின்றது. அதாவது எல்லாம் தருவோம் எனக் கூறிவிட்டு எமக்கிடையே அல்லது எமது சகோதர இனத்துக்கிடையே மோதலை உருவாக்கி வேடிக்கை பார்க்கின்றது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் 5ஆவது கூட்டத் தொடர் நேற்றுக்காலை (ஞாயிற்றுக்கிழமை) 9.30 மணியளவில் யாழ்ப்பாண நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

வவுனியா பொருளாதார மையத்தை எடுத்துக் கொள்வோம். பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வவுனியா அரசாங்க அதிபர் தான், நிபுணத்துவ அலுவலர் குழு அமைத்து, மையம் எங்கு அமைய வேண்டும் என்று அவர்களிடம் இருந்து தெரிந்து கொண்டார். அது எமக்கு அறிவிக்கப்பட்ட போது அலுவலர் அறிக்கையைப் பரிசீலனை செய்து அவர்களின் முடிவு சரியே என்று கண்டு, எமது வடமாகாண சபை அவர்களின் கருத்தை வலியுறுத்தி ஓமந்தையே சிறந்த இடம் என்று எமது கருத்தை அமைச்சர் ஹரிசனுக்குத் தெரியப்படுத்தினோம்.

அனால், இன்னொரு அமைச்சர், அதைத் தாண்டிக்குளத்தில் அமைக்கவேண்டுமென நானில்லாத ஒரு ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் மாற்றி அமைக்கப் பாத்தார். ஊர் இரண்டு பட்டது. பின்னர் எமது முரண்பாடுகைளக் களைவதாகக் கூறி தற்போது இரண்டு பொருளாதார மத்திய நிலையங்களை அமைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. எந்த அளவுக்குத் தெற்கில் உள்ள மையம் மாங்குளத்தைப் பாதிக்கக்கூடும் என்பது சர்ச்சைக்குரிய விடயமாகியுள்ளது.

தெளிந்த ஒரு குட்டையில் பாறாங் கல்லைப் போட்டால் அது எவ்வாறு குளத்தின் அமைதியையும், அதன் அசைவற்ற நிலையையும் மாறிப் போகச் செய்கின்றதோ, அவ்வாறே காலத்திற்குக் காலம் இந்த அரசாங்கங்கள் எம்மிடையே சில முரண்பாடான விடயங்களைத் தோற்றுவித்து எமது இனத்தின் ஒற்றுமையைக் குலைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன எனவும் தெரிவித்தார்.