3 மாத வாடகை மட்டுமே அட்வான்சாக வாங்க வேண்டும்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

597 0

வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களிடம் 3 மாத வாடகையை மட்டுமே, அட்வான்ஸ் தொகையாக வாங்க வேண்டும் என வாடகை நிர்ணய சட்ட மசோதா குறித்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார்.

தமிழகத்தில் தற்போதுள்ள வாடகை கட்டுப்பாடு சட்டத்தை நீக்கவும், அதே நேரத்தில் தற்போதுள்ள சூழலுக்கேற்ப புதிய சட்டத்தை கொண்டுவரவும் வகை செய்யும் புதிய சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் வீட்டுவசதித் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அறிமுகம் செய்தார்.

இச்சட்டத்தில் குத்தகை உரிமை ஒப்பந்தம், கால அளவு, வாரிசு உரிமை, உள்வாடகைக்கான கட்டுப்பாடுகள், வாடகையை மாற்றி அமைப்பது, பிணைத் தொகை வைப்பீடு, வாடகை ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தந்தி டி.வி.க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது:

வாடகை ஒப்பந்தங்கள் பதிவு செய்யப்பட்டு, பதிவு எண் வழங்கப்படும். முறையாக பதிவு செய்யாமல், வீடுகளை வாடகைக்கு விட முடியாது. புதிய வாடகை நிர்ணய சட்ட மசோதாவால் குடியிருப்பவர்கள், உரிமையாளர்கள் இருவருக்குமே சட்ட பாதுகாப்பு உள்ளது. பிரச்சனைகளை விசாரித்து 30 நாட்களுக்குள் அதிகாரிகள் தீர்வு காண்பர்.

3 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக உரிமையாளர்கள் வாங்க வேண்டும். வீடுகளை பழுது பார்க்கும் பணிகள் குறித்து வரையறை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment