இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்த 42 படகுகள் விடுவிப்பு

29239 0

2015-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை சிறைபிடிக்கப்பட்ட 42 விசைப்படகுகள் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கப்படுவதாக இலங்கை கோர்ட்டு அறிவித்துள்ளது.

தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் போது எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்களை சிறைபிடித்து செல்வதையும், தாக்குவதையும் இலங்கை கடற்படையினர் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

மீனவர்களோடு படகுகளும் சிறைபிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு புதுக்கோட்டை, ராமேசுவரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்களின் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனை விடுவிக்கக் கோரி மீனவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் படி கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை சிறைபிடிக்கப்பட்ட 42 விசைப்படகுகள் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கப்படுவதாக இலங்கை கோர்ட்டு அறிவித்துள்ளது.

நாளை மறுநாள் (17-ந் தேதி) இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளிடம் படகுகுள் ஒப்படைக்கப்படும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.விசைப்படகுகளை இலங்கை நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இலங்கை அரசு நீண்ட காலமாக படகுகளை விடுவிக்க இழுத்தடிப்பு செய்தது. இந்த நிலையில் தற்போது படகுகள் விடுவிக்கப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றனர்.