அரசியல் தீர்வைப் பேசி பொறுப்புக்கூறலை மறக்க வைக்க இடமளிக்கக் கூடாது!

410 0

maxresdefault1பொறுப்புக்கூறல், வடகிழக்கு இணைப்பு, மற்றும் அரசியல் தீர்வு உள்ளிட்ட மூன்று விடயங்களையும் சர்வதேச மட்டத்தில் வலியுறுத்த வேண்டுமென தமிழ் மக்கள் பேரவையிடம் வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தமிழ் மக்கள் பேரவையின் 5வது கூட்டத்தொடர் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.கூட்டத்தொடரின் போது உரையாற்றுகையிலேயே தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்களிடம் முதலமைச்சர் இந்த வேண்டுகோளினை விடுத்தார்.

மேலும் அவர் அங்கு தனது கருத்துகளை தெரிவிக்கையில்,

ஐக்கிய நாடுகள் சபை இரு கோரிக்கைகளை சென்ற வருடம் செப்டெம்பர் மாதத்தில் முன்வைத்துள்ளது. அவையாவன போர் முடியும் தறுவாயில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு இலங்கை பொறுப்பு கூற வேண்டும்.போரினால் பாதிக்கப்பட்ட வடமாகாணத்தில் இருந்து இராணுவ பிரசன்னத்தைக் குறைக்க வேண்டும் என்பனவாகும். போருக்குப் பின்னரான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் பொறுப்புக் கூறல் சம்பந்தமாக இலங்கை மிகக் குறைவான முன்னேற்றமே கண்டுள்ளது.

இராணுவத்தைக் கண்காணிக்கும் மக்கள் குழுவின் பலத்தை மேலும் வலிமைப் படுத்த வேண்டும் பாதுகாப்புக் கொள்கைகள் பற்றி மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.வடமாகாண மக்களுடன் சீரான உறவைப் பேண அரசாங்கம் தவறிவிட்டது அரசாங்கம் பொறுப்புக் கூறல் விடயத்தில் உண்மையை அறிந்து கொள்ளும் விதத்தில் நடவடிக்கைகள் எடுப்பதாகத் தெரியவில்லை. விஷேட உள்நாட்டு நீதி மன்றங்கள் அமைப்பது பற்றித்தான் கூறப்படுகிறது எனவும் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மேலும், இலங்கை 2009 தொடக்கம் உள்நாட்டு நீதிமன்றங்கள் பற்றிக் கூறி வந்தாலும் எந்தவித நன்மையும் கிட்டப் போவதில்லை. இதை நாங்கள் திரும்பத் திரும்ப எங்கள் மக்கள் கவனத்தில் நிலை நிறுத்த வேண்டும்.அரசியல் யாப்பு பற்றிய முரண்பாடுகள் முடிவுக்கு கொண்டுவந்த நிலையிலேயே உள்ளக விசாரணை மன்றங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் இங்கு எமது குறைகள் இன்னமும் தீர்மானிக்கப்படாமலேயே இருக்கின்றன.தீர்க்காத சூழ்நிலையில் பெரும்பான்மை மக்களின் கை ஓங்கியிருக்கும் இந்நிலையில் உள்நாட்டு நீதிமன்றங்கள் நீதியை வழங்குவன என்று எதிர்பார்க்க முடியாது. ஆகவே சர்வதேச நீதிபதிகளே விசாரணைகளை நடத்த வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

எமது பெரும்பான்மையின் நீதிபதிகள் சிங்களவர்களுக்குப் பக்கச்சார்பாகவே இதுவரையில் நடந்து வந்துள்ளார்கள். இந்நாட்டின் உள்ளக விசாரணை நீதியைப் பெற்றுத் தரமாட்டாது என்பதற்கு எடுத்துக்காட்டாகவே “நீதித்துறை மனக்கிடக்கை” எனும் நூல் அமைந்துள்ளது.போர்க் குற்றங்கள் பற்றிய உண்மையை அறிந்தால்தான் நல்லெண்ணத்திற்கு வழி வகுக்கலாம். உள்ளக விசாரணைகள் குமாரபுரம் வழக்குப் போல முடிவடையும் என்பதில் சந்தேகம் தேவையில்லை.எனவே பொறுப்புக் கூறல் விடயத்தில் சர்வதேச நீதிபதிகளின் வரவே நீதியைப் பெற்றுத்தரும் என்ற விடயத்தை நாங்கள் ஊன்றிக் கூற வேண்டிய ஒரு கடற்பாடு உருவாகியுள்ளது. இந்த விடயத்தை எமது தூதரகங்களுக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் கூறிக் கொண்டே இருப்பது அவசியம்.

போர்க் குற்றம் பற்றிய சட்டமானது இன்னமும் எமது சட்டவாக்கத்தினுள் உள்ளடக்கப்படவில்லை என்பதை, அறிந்து வைத்திருக்க வேண்டும். தற்போதைய அரசியல் யாப்பின் 13 (6)வது ஷரத்தின் புறவுரையின் பிரகாரமே அவற்றை உள்ளேற்பதாகக் கூறியிருப்பினும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.வழக்கு நடத்துனர் நீதிபதிகள் வெளியில் இருந்து வந்தாலும் விசாரணை நடத்தப் போதுமான சட்டம் இன்னமும் எமது சட்டவாக்கத்தினுள் உள்ளேற்கப்படவில்லை என்பதே உண்மை. அரசியல் தீர்வைப் பேசி பொறுப்புக்கூறலை மறக்க வைக்க இடமளிக்கக் கூடாது.

அரசியல் தீர்வைப் பற்றியும் உரக்கக் கூற வேண்டியிருக்கின்றது. எமது அரசியல் தீர்வைப் பொறுத்த வரையில் எமது இன அடையாளம், எமது நில அடையாளம் எமது பாரம்பரிய கலாச்சார அடையாளம், மொழி அடையாளம், எமது சமூக ஒன்றிப்பு போன்ற பலவற்றை வலியுறுத்தியே எமக்கான சுயநிர்ணய உரிமையை நாங்கள் பெற வழி வகுக்க வேண்டும்.மாண்புடனும் பாதுகாப்புடன் நிலைபாட்டுடன் நாங்கள் வாழ வழி காண வேண்டும்.