நாட்டில் நிலவும் வரட்சியினால் வடமாகாணம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், முல்லைத்தீவு மாவட்டம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளது.
இதன் காரணமாக முல்லைத்தீவில் உள்ள 136 கிராமசேவகர் பிரிவுகளில் 135 கிராமசேவகர் பிரிவுகள் முற்றிலும் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அராசங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வறுமைக்கு கோட்டுக்கு உட்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் வரட்சி காரணமாக அப்பகுதி வாழ் மக்கள், உயிரினங்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளதுடன், பயிர்ச்செய்கை நடவடிக்கையும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
நிலவும் கடுமையான வெப்பத்தினால் பாரிய குடிநீர்த் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் 44 கிராம அலுவலர் பிரிவுகளில் தற்போது குடிநீர் நெருக்கடி காணப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நீரேரிகள் மற்றும் குளங்களில் நீர் வற்றியுள்ளதனால் கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
யுத்தம் காரணமாக பல்வேறு இழப்புக்களைச் சந்தித்துள்ள முல்லைத்தீவு மாவட்ட மக்கள், அதன் தாக்கத்திலிருந்து இதுவரை மீண்டு எழ முடியாது தத்தளித்து வரும் நிலையில், கடுமையான வரட்சியினால் தொழில் வாய்ப்புக்களின்றிய நிலை காணப்படும் அதேவேளை, சிறுபோக நெற்செய்கையும் பாதிப்படைந்துள்ளதாக அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவை மாத்திரமன்றி நன்னீர் மீன்பிடியை வாழ்வாதார தொழிலாக கொண்டுள்ள மீனவர்களும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
குளங்களில் நீரி வற்றியுள்ளதனால் தொழிலை மேற்கொள்ள முடியாதுள்ள நிலையில், அன்றாட வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்த முடியாது அல்லலுறுவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.