தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

249 0

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் உள்ள கடலோர பகுதிகளில் பரவலான மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், “வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை நேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது”, என்றனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர கணக்கீட்டின்படி, நீலகிரி மாவட்டம் தேவலாவில் அதிகபட்சமாக 5 செ.மீ. மழை பெய்துள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையில் 3 செ.மீ. மழையும், சேலத்தில் 2 செ.மீ. மழையும், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் 1 செ.மீ மழையும் பதிவாகி இருக்கிறது.

Leave a comment