தமிழில் ரெயில் டிக்கெட்டுகள் வழங்க நடவடிக்கை – பொங்கல் முதல் அமல்படுத்த திட்டம்

431 0

ரெயில் டிக்கெட்டுகள் தமிழில் வழங்கப்பட உள்ளதாகவும், வரும் பொங்கல் பண்டிகை முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் பயணிகள் வசதி மேம்பாட்டுக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

ரெயில் டிக்கெட்டுகள் தமிழில் வழங்கப்பட உள்ளதாகவும், வரும் பொங்கல் பண்டிகை முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் பயணிகள் வசதி மேம்பாட்டுக்குழு உறுப்பினர் தெரிவித்தார். மத்திய ரெயில்வே துறையால் தற்போது வழங்கப்படும் ரெயில் டிக்கெட்டுகள் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளிலேயே உள்ளன.

இது தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் வசதிக்குறைவாக உள்ளது. எனவே டிக்கெட்டுகள் அந்தந்த மாநில மொழிகளில் அச்சிட்டு வழங்க வேண்டும் என்று பயணிகளும், பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.இந்த நிலையில் டெல்லியில் ரெயில் பயணிகள் வசதி மேம்பாட்டுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழில் டிக்கெட்டுகள் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, தமிழ் மட்டும் இன்றி டிக்கெட் வழங்கப்படும் மாநிலத்தின் மொழிகளில் விவரங்களை அச்சடிக்க முடிவு எடுக்கப்பட்டது.

இது தொடர்பான மென்பொருள் (சாப்ட்வேர்) புதிதாக வடிவமைக்கப்பட்டு இன்னும் 6 மாதங்களில் அந்தந்த மாநில மொழிகளில் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டு வழங்க முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து ரெயில் பயணிகள் வசதி மேம்பாட்டுக்குழு உறுப்பினர் ஆசீர்வாதம் ஆச்சாரி கூறியதாவது:-

ரெயில் டிக்கெட்டுகளில் உள்ள விவரங்கள் ஆங்கிலம், இந்தியில் இருப்பதால் பலர் சிரமப்படுகிறார்கள். எனவே, ரெயில் டிக்கெட்டில் உள்ள விவரங்கள் தமிழில் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தினேன். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற விவாதத்திற்கு பிறகு, தமிழ் மட்டுமல்லாமல் டிக்கெட் எடுக்கப்படும் இடம் அமைந்துள்ள மாநிலத்தின் மொழியில் விவரங்கள் அச்சடிக்க ரெயில்வே வாரியம் ஒப்புக்கொண்டது.

இதற்காக டிக்கெட் அச்சிட பயன்படுத்தப்படும் மென்பொருள் புதிதாக உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இன்னும் 6 மாதங்களுக்குள் இப்பணி நிறைவு பெற்று, ரெயில் டிக்கெட் தமிழ் மொழியில் வழங்கப்படும். பொங்கல் பண்டிகை நாளில் இதனை அமல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு ஆசீர்வாதம் ஆச்சாரி கூறினார்.

Leave a comment