துருக்கி: நீச்சல் குளத்தில் பாய்ந்த மின்சாரம் – 3 சிறுவர்கள் உள்ளிட்ட 5 பேர் பலி

221 0

துருக்கி நாட்டில் நீச்சல் குளத்தில் மின்சாரம் பாய்ந்ததால் அதில் குளித்துக்கொண்டிருந்த 3 சிறுவர்களும், சிறுவர்களை காப்பாற்றச்சென்ற 2 பேரும் பரிதாமாக உயிரிழந்தனர்.

துருக்கி நாட்டின் வடமேற்கு பகுதியான சகார்யா மாகாணத்தில் உள்ள அக்யாஷி என்ற பகுதியில் உல்லாச பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 12, 15, 17 வயதுடைய மூன்று சிறுவர்கள் குளித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக நீச்சல் குளத்தில் மின்சாரம் பாய்ந்தது. இதனால், அதிலிருந்த சிறுவர்கள் அலறி துடித்தனர். இதனை கண்டதும் பூங்கா மேலாளர் மற்றும் அவரது மகன் ஆகியோர் சட்டென தண்ணீரில் குதித்து சிறுவர்களை காப்பாற்றும் முயற்ச்சியில் ஈடுபட்டனர்.

ஆனால், மின்சாரத்தில் சிக்கி 3 சிறுவர்கள் மற்றும் பூங்கா மேலாளர், மேலாளரின் மகன் ஆகிய ஐந்து பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தண்ணீரில் எப்படி மின்சாரம் பாய்ந்தது என்பது குறித்து போலீசார் விடாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a comment