தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இடையிலான ஒப்பந்தம் தொடர்ந்து நீடிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் நிதி இராஜாங்க அமைச்சருமான எரான் விக்கிரமரட்ன தெரிவித்தார்.
அத்துடன் மஹிந்த ராஜபக் ஷவின் தேவைக்கேற்ப எம்மால் தேர்தலை நடத்த முடியாது. எந்தவொரு தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு தயாராக உள்ளோம். இதன்படி விரைவில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிட்டகோட்டேயில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போது நாட்டில் நிலைகொண்டுள்ள பொருளாதார பிரச்சினை தொடர்பில் ஆராய வேண்டியுள்ளது. தற்காலிக பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும். நிரந்தர தீர்வை பெற வேண்டுமாயின் ஸ்திர திட்டங்களை தயாரிக்க வேண்டும். குறுகிய கால நோக்கத்திற்காக தீர்மானங்களை எடுக்கக் கூடாது.
நீண்ட கால திட்டத்திற்கு நாம் செல்லவுள்ளோம். வரவு – செலவுத்திட்ட பற்றாக்குறையை குறைத்துக்கொள்ள வேண்டும். கடன் பெறுவதையும் குறைத்துக்கொள்ள வேண்டும். நேரடி முதலீடுகளின் மூலமாக இலாபம் அடையமுடியும். அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்.
மேலும் ஏற்றுமதிக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். இலங்கையில் இருப்பது சிறிய சந்தையாகும். எமக்கு பாரிய சந்தை தேவையாகும். அத்துடன் வீண் செலவினத்தையும் குறைத்துக்கொள்ள வேண்டும். அரச நிறுவனங்களின் நஷ்டத்தை முழுமையாக குறைத்துக்கொள்ள வேண்டும். இல்லையேல் மக்களுக்கே அது வந்து சேரும்.
பொருளாதாரத்தில் நிலையான தன் மையை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். வரிக் கொள்கையில் நிலையான தன்மையை கொண்டு வரவேண்டும். பாராளுமன்றத்தில் புதிய வரிக் கொள்கையை சமர்ப்பிப்போம். அடுத்த மாதம் அது சமர்ப்பிக்கப்படும். இதன்போது விவாதம் செய்யப்படும். நிலையான தன்மையை ஏற்படுத்தும் நோக்குடனேயே புதிய வரிக் கொள்கை தயாரிக்கப்படுகின்றது.
கடந்த காலங்களில தேர்தலை மையமாக வைத்தே பொருளாதாரம் சார்ந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அரசியல் வழிப் போக்கில் இருந்து சீனா, வியட்நாம் போன்ற நாடுகள் முழுமையாக மாறியுள்ளன. மக்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டத்திற்கு செல்ல வேண்டும். எமக்கு முகாமைத்துவம் தொடர்பில் பெரும் சவால் உள்ளது. அரச சேவை மேலும் செயல்திறனாக மாற வேண்டும்.
அத்துடன் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இடையிலான ஒப்பந்தம் தொடர்ந்து நீடிக்கும். தேசிய அரசாங்கத்தின் ஊடாக பல விடயங்களை சாதிக்க வேண்டியுள்ளது.
மேலும் தேர்தலை நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுப்பப்படு கின்றது. மஹிந்த ராஜபக் ஷவின் தேவைக் கேற்ப எம்மால் தேர்தலை நடத்த முடியாது. எந்தவொரு தேர்தலுக்கு முகங்கொடுப் பதற்கும் தயாராக உள்ளோம். இதன்படி விரைவில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என்றார்.