மத்திய அரசின் நிதியை தடுத்ததை ஆதாரத்துடன் கூற முடியுமா?கிரண்பேடி சவால்

224 0

மத்திய அரசின் நிதியை தடுத்ததை ஆதாரத்துடன் கூற முடியுமா? என்று புதுவை அமைச்சர்களுக்கு கவர்னர் கிரண்பேடி சவால் விடுத்துள்ளார்.

புதுவை மாநிலத்தில் மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கை விவகாரத்தில் கவர்னர் கிரண்பேடிக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

கவர்னர் கிரண் பேடி நேரடியாக தலையிட்டு நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுத்தார். இந்த மாணவர்களை சேர்க்க நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மறுத்தன.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கவர்னரின் செயலாளர் 4-வது பிரதிவாதியாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு மாணவர்களை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ரூ.10 லட்சம் தற்காலிக கட்டணமாக பெற்று கொண்டு வருகிற 19-ந் தேதிக்குள் சேர்க்க வேண்டும் என இடைக்கால உத்தரவிட்டு உள்ளது. இதனையடுத்து கவர்னர் கிரண்பேடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

புதுவையில் சென்டாக் மூலம் அரசு ஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியர் கடும் இன்னலுக்கு ஆளாகி இருந்தனர். சேர்க்கை மறுக்கப்பட்ட நிலையில் தற்போது உயர் நீதிமன்றத்தில் அவர்களுக்கு தீர்வு கிடைத்துள்ளது.இதற்காக தலைமை நீதி பதி அமர்வுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒத்துழைத்த மாணவர்கள், பெற்றோர், ஊடகத்தினருக்கு நன்றி தெரிவிக்கிறேன். இப்பிரச்னையில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால், அவர்கள் நிலை பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியதால் கவர்னர் மாளிகை தலையிட நேரிட்டது.

என்னுடைய உத்தரவின் படி தான் துணைநிலை கவர்னரின் செயலாளர் தேவநீதிதாஸ் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து வாதியாக இணைந்து கொண்டார். அரசின் செயல்பாடுகளில் வேறுபாடு எழுந்ததால், நானே இந்நடவடிக்கையை மேற்கொண்டேன்.

சென்டாக் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை ஏற்பட தற்போதுள்ள அமைப்பை முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும். தற்போதுள்ள குழுவை நீக்க வேண்டும்.

நான் பணி விதிகளின்படி தான் செயல்படுகிறேன். எனது அதிகாரத்தைக் குறைக்க வேண்டும் என மாநில அரசு விரும்பினால் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. இதை செய்ய வேண்டியது மத்திய அரசாகும். சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என்றால் நாடாளுமன்றம்தான் முடிவு செய்யும்.

அனைத்து அதிகாரங்களும் சட்டத்துக்குட்பட்டது தான். விதிகளில் திருத்தம் செய்தால் அதற்கேற்றவாறு செயல்படுவேன். நான் மத்திய அரசின் நிதி எதையும் புதுவைக்கு வருவதை தடுக்கவில்லை.

எந்த அமைச்சராவது தைரியமாக கூற முன்வருவார்களா. இதை சவாலாக விடுக்கிறேன். நான் எந்த நிதியை தடுத்தேன் என்பதை ஆதாரத்துடன் கூற முடியுமா?

இவ்வாறு கவர்னர் கிரண்பேடி கூறினார்.

Leave a comment