மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரதமர் மோடி இன்று மாலை வழிப்பட்டார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம், மிகவும் பிரசித்திப்பெற்ற ஆன்மீக ஸ்தலமாக திகழ்கிறது. இந்த கோயிலின் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கடந்தாண்டு திருக்கார்த்திகை நாளில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கக்கோரி மதுரை எழுமலையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் உட்பட பலர் உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருக்கார்த்திகை நாளில் தீபத்தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், கோயில் செயல் அலுவலர் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு கார்த்திகை நாளுக்கு மறுநாள் விசாரணைக்கு வந்தபோது மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களுடன் சென்று மனுதாரர்களே தீபம் ஏற்றலாம் என நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவுபடி மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களுடன் தீபம் ஏற்றச் சென்ற மனுதாரர்களை 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாக கூறி போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
திருப்பரங்குன்றம் விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக்கோரி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இம்பீச்மென்ட் தீர்மானம் நிறைவேற்ற சபாநாயகரிடம் மனு அளித்தன. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி எம்பிக்களும், பாஜக எம்பிக்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த சூழலில் மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்த பூர்ணசந்திரன் என்பவர் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றக்கோரி மதுரை அவுட்போஸ்ட் அருகே பெரியார் சிலை முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தால் திருப்பரங்குன்றம் தீப விவகாரம் நாடு முழுவதும் பேசு பொருளாக மாரியது.

