முன்னிலை சோசலிசக் கட்சியின் நான்காவது தேசிய மாநாடு இன்று!

11 0

முன்னிலை சோசலிசக் கட்சியின் நான்காவது தேசிய மாநாடு “வர்க்கத்திற்கு அதிகாரம் – அதிகாரத்திற்கு கட்சி” எனும் கருப்பொருளில் இன்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

கட்சியின் அதிகாரத்திற்கான மூலோபாயங்கள் குறித்த நூல் மற்றும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பான நூல் என்பனவும் இதன்போது வெளியிடப்படவுள்ளதாக கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

இந்த மாநாட்டின் போது கட்சியின் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான புதிய மத்திய குழு தெரிவு செய்யப்படவுள்ளதுடன் புதிய அரசியல் வேலைத்திட்டமும் அங்கீகரிக்கப்படவுள்ளது.

இந்த மாநாட்டின் பிரதான உரைகளை கட்சியின் பொதுச்செயலாளர் குமார் குணரத்னம் மற்றும் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர். மாநாட்டின் பொது அமர்வு முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 2.00 மணி வரை நடைபெறவுள்ளதுடன் அதனைத் தொடர்ந்து கட்சியின் உறுப்பினர்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட   விசேட அமர்வுகள் பிற்பகலில் இடம்பெறவுள்ளன.

வெளிநாடுகள் பலவற்றின் இடதுசாரி கட்சிகள் இந்த மாநாட்டிற்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். வர்க்கத்திற்கு அதிகாரம் – அதிகாரத்திற்கு கட்சி என்ற எங்களது சமூக நோக்கத்தை அடைந்து கொள்ள அனைவரும் அணி திரண்டு வாருங்கள் என்றார்.