நிரந்தர சேவையில் இணைத்துக் கொள்ளப்படாத டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்கள் இன்னும் 298 பேர் காணப்படுகின்றனர். அவர்களையும் நிரந்த சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்கள் (கள டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்) இலவச சுகாதாரத் துறையில் மக்களின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றி வருகின்றனர். ஐக்கிய மக்கள் சக்தியின் வேண்டுகோளின் பேரில் 640 டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்கள் நிரந்த சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் தமது பிரச்சினைகளை முன்வைப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை நேற்று வியாழக்கிழமை (27) மாலை கொழும்பில் சந்தித்தனர். இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
8 ஆம் தரத்தை பூர்த்தி செய்து, என்.வி.கியூ மட்டம் 3 சித்தியடைந்த 840 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கியமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனாலும் தற்சமயம் மேலும் 298 பேர் நிரந்தர நியமனம் இல்லாமல் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
27,000 கொடுப்பனவுடன் களத்தில் இறங்கி வேலை செய்வது கடினமாகும், ஆகையினால் இவர்களையும் சேவையில் நிரந்தரமாக்குமாறு நான் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

