எல்பிட்டிய, பதுவன்ஹேன பகுதியில் நீண்டகால காணிப் பிரச்சினை காரணமாக சகோதரர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எல்பிட்டிய, பொல்கஸ்வத்த பகுதியைச் சேர்ந்த இரு சகோதரர்களுக்கிடையே நீண்டகாலமாகத் தனிப்பட்ட காணிப் பிரச்சினை நிலவி வந்துள்ளது. இந்த நிலையில், குறித்த காணியை அளவீடு செய்வதற்காக இன்று முற்பகல் 11.00 மணியளவில் நில அளவையாளர்கள் வருகை தந்துள்ளனர்.
நில அளவீட்டுப் பணிகள் நிறைவடைந்த பின்னர், இருவருக்கும் இடையில் மீண்டும் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மூத்த சகோதரர் தனது தம்பியைத் தாக்கியுள்ளார். இதில் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர் ஐந்து பிள்ளைகளின் தந்தையான 73 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக எல்பிட்டிய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தலைமறைவாகியுள்ள சந்தேகநபரான அண்ணனைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

