அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களை முறைப்படுத்த தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்த வழக்கில், அரசு 3 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரை கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு தயாரித்து வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து அரசியல் நிகழ்வுகளுக்காக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த ஜனவரி அன்று தமிழக அரசு அரசியல் நிகழ்வுகளுக்காக வெளியிட்ட அரசாணையில் உள்ள சில நிபந்தனைகள் தன்னிச்சையானவை மற்றும் பாரபட்சமானவை என தவெக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தநிலையில், கரூர் சம்பவத்திற்குப் பிறகு உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின் படியே இந்த விதிகள் வகுக்கப்பட்டன. இதில் என்ன தவறு இருக்கிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து தவெக மனு தொடர்பாக அரசு மூன்று வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

