பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் தாரிக் மஹ்மூத் ஜஹாங்கிரி என்பவர் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் இவரது சட்டப் படிப்பு சான்றிதழ் போலியானது என கடந்தாண்டு புகார் வந்தது.
இதையடுத்து இவர் நீதிபதியாகப் பணியாற்ற தடைவிதிக்கப்பட்டு, அசல் சட்டப் படிப்பு சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்காமல், அவரது வழக்கை கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தர விடப்பட்டது.
இதையடுத்து கராச்சி பல்கலைக்கழக பதிவாளர் ஆவணங்களை சமர்ப்பித்தார். அதில் தாரிக் மஹ்மூத் ஜஹாங்கிரி சட்டப் படிப்பு சான்றிதழ் போலியானது என தெரிவிக்கப்பட்டது. மேலும் இவர் கடந்த 1988-ம் ஆண்டு தேர்வு எழுதும்போது ஆள்மாறாட்டம் செய்து பிடிபட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இவர் இந்த தண்டனையை ஏற்காமல், அடுத்தாண்டே, இம்தியாஸ் அகமது என்ற மாணவனின் பதிவு எண்ணை பயன்படுத்தி தேர்வெழுதியுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பில் தாரிக் மஹ்மூத் ஜஹாங்கிரியை நீதிபதி பதவியில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்தது.

