அமெரிக்கா-ஈரான் இடையே இன்று பேச்சுவார்த்தை

22 0

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஜெனீவாவில் இன்று வியாழக்கிழமை (26) 3ஆவது சுற்று பேச்சுவார்த்தை நடக்கிறது.

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் பிடிகொடுக்காத ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தின.

இதைத்தொடர்ந்து, மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது படைகளை குவித்து, ராணுவப் பலத்தை கணிசமாக அதிகரித்துள்ளது.

இதனிடையே, அரபுநாடுகள் கேட்டுக் கொண்டதன் பேரில், ஈரானுடன் பேச்சுவார்த்தையை அமெரிக்கா ஆரம்பமானது. எப்போது வேண்டுமானாலும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை தொடங்கும் என்ற சூழலில், அமெரிக்க பார்லியில் பேசிய ட்ரம்ப், ‘பயங்கரவாதத்தின் முதன்மை ஆதரவாளரான ஈரான் அணு ஆயுதம் பெறுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். அடுத்த 10 முதல் 15 நாட்களுக்குள் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்,’ என்றும் எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா, ஈரான் இடையே இன்று ஜெனீவாவில் 3ஆவது சுற்று பேச்சுவார்த்தை நடக்கிறது.

அமெரிக்கத் தரப்பில் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும், ஈரான் தரப்பில் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தலைமையிலான குழுவினரும் பங்கேற்கின்றனர். ஓமன் வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்புசைதி இந்தப் பேச்சுவார்த்தையை ஒருங்கிணைக்கிறார்.

ஈரானின் பொருளாதாரம் ஏற்கனவே கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. மேலும், உள்நாட்டிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இப்படிப்பட்ட சூழலில், இன்று நடக்கும் பேச்சுவார்த்தையின் முடிவு போரைத் தவிர்க்குமா அல்லது நேரடி மோதலுக்கு வழிவகுக்குமா என்பதை உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன