காரைதீவு பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் பிரத்தியேக வகுப்புகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என சமய அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.
இதற்கென வெகுவிரைவில் பொதுக் கூட்டமொன்றையும் நடத்தி, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மகஜர் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் மற்றும் காரைதீவு பிரதேச செயலாளர் ஆகியோரிடம் செவ்வாய்க்கிழமை (24) அன்று கையளிக்கப்பட்டுள்ளது.
காரைதீவு ஆலய அறங்காவலர் ஒன்றியம், இந்து சமய விருத்தி சங்கம், மற்றும் அனைத்து அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோரினால் இக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காரைதீவு பிரதேசங்களில் அண்மைக்காலமாக ஞாயிற்றுக்கிழமைகளில் பிரத்தியேக வகுப்புக்கள் அதிகரித்து காணப்படுகின்றதனால் அறநெறி பாடசாலைக்கு வரும் மாணவர்களின் வருகை குறைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆன்மீக சிந்தனை ஒழுக்கம் என்பன எமது சமூகத்திடையே குறைந்து வருகின்றது.எனவே இதனை தடுத்து ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறி பாடசாலைக்கு வருகை தரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அறம் ஒழுக்கம் சார்ந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் இக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

