தெற்கு கடற்பரப்பில் ஆழ்கடலில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது திடீரென நோய்வாய்ப்பட்ட மீனவர் ஒருவர், கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு இன்று செவ்வாய்க்கிழமை (24) காலை சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
காலி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த 12ஆம் திகதி 5 மீனவர்களுடன் புறப்பட்டுச் சென்ற பல நாள் மீன்பிடிப் படகு, தெற்கே 178 கடல் மைல் தொலைவில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தது. இதன்போது, அதிலிருந்த மீனவர் ஒருவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டார்.
மீன்பிடி மற்றும் நீர்வளத் திணைக்களம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, கொழும்பு கடற்படைத் தளத்தில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் உடனடியாகச் செயற்பட்டது. முதலில் தொலைபேசி ஊடாகத் தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கிய கடற்படை, நோயாளியை விரைவாகக் கரைக்குக் கொண்டுவருமாறு அறிவுறுத்தியது.
தெற்கு கடற்பரப்பில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ‘இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹு’ (SLNS Gajabahu) உடனடியாக அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது. திங்கட்கிழமை (23) இரவு குறித்த மீன்பிடிப் படகிலிருந்து நோயாளி கஜபாஹு கப்பலுக்கு மாற்றப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது.
இன்றையதினம் காலை காலி துறைமுகத்துக்கு அப்பால் உள்ள கடற்பகுதிக்குக் கொண்டுவரப்பட்ட நோயாளி, அங்கிருந்து ஒரு சிறிய கடற்படைப் படகு மூலம் கரைக்குக் கொண்டுவரப்பட்டார். பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அவர் உடனடியாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இலங்கைக் கடல் எல்லைக்குள் இக்கட்டான நிலையில் உள்ள கடல்சார் மற்றும் மீனவ சமூகத்தினருக்குத் தேவையான உடனடி நிவாரணங்களை வழங்கத் தாம் எப்போதும் தயாராக இருப்பதாகக் கடற்படை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

