இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு தீவிர சிகிச்சை

14 0

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு மருத்துவர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி வீட்​டில் தவறி கீழே விழுந்​த​தில், அவரது தலை​யில் காயம் ஏற்​பட்​டது. இதையடுத்து அவர் சென்னை நந்தனத்​தில் உள்ள தனியார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவருக்கு இருந்த நுரையீரல் பிரச்சினையால் சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்பட்டதை தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அவருக்கு சுவாசிக்க உதவியாக டிரக்கியாஸ்டமி கருவியும், உணவு கொடுப்பதற்காக, வயிற்று பகுதியில் டியூபும் பொருத்தப்பட்டது. உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து வீடு திரும்பினாலும், அவ்வப்போது, மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். நல்லகண்ணு தனது 101-வது பிறந்த நாளை கடந்த டிசம்பர் 26-ம் தேதி கொண்டாடினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நல்லகண்ணுக்கு சிறுநீர் கழிப்பது குறைய தொடங்கியதால், கடந்த டிசம்பர் 28-ம் தேதி ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது மூப்பு காரணத்தால் வேறு சில பிரச்சினைகளும் இருந்ததால், அவரது உடல்நிலையை கண்காணித்து தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர்.இந்நிலையில், இன்று நல்லகண்ணுவின் உடல்நிலை முன்னேற்றத்தில் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனே தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். செயற்கை சுவாச உதவியுடன் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.