யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் படுகொலையான சிறுவனுக்கு நீதி கோரி யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை (22) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அல்லைப்பிட்டி பகுதியில் பயணித்த ஹயஸ் ரக வாகனத்தை வழி மறித்ததாகவும், அதன்போது வாகனத்தை நிறுத்தாது சென்றமையால், வாகனத்தின் மீது மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் வாகன சாரதியான சிறுவன் உயிரிழந்தார் எனவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
பொலிஸாரின் சமிக்ஞையை மீறி நிற்காமல் சென்ற வாகனத்தினை பொலிஸார் வழிமறித்த பின்னரே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்த துப்பாக்கி பிரயோகம் பொலிஸாரின் திட்டமிட்ட படுகொலை எனவும் குற்றச்சாட்டுக்கள் எழும்பி வரும் உயிரிழந்த சிறுவனின் உறவினர்கள், இந்தப் படுகொலைக்கு நீதி வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

