பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிரான்ஸ் அருங்காட்சியகம் தொடர்பில் அதிர்ச்சியளிக்கும் ஒரு தகவல்

16 0

பிரான்ஸ் அருங்காட்சியகம் ஒன்றில் நடந்த கொள்ளைச் சம்பவம் காரணமாக அந்த அருங்காட்சியகம் தலைப்புச் செய்தியான நிலையில், மீண்டும் அந்த அருங்காட்சியகம் தொடர்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள Louvre அருங்காட்சியகத்திலிருந்து 88 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது நினைவிருக்கலாம். இந்நிலையில், அந்த அருங்காட்சியகத்தில் நடைபெற்றுள்ள பாரிய மோசடி ஒன்று குறித்த செய்தி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

ஆம், Louvre அருங்காட்சியகத்தில், பல ஆண்டுகளாக டிக்கெட் மோசடி ஒன்று நடைபெற்றுவந்துள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளார்கள். அதாவது, அருங்காட்சியகத்துக்கு சுற்றுலாப்பயணிகளை அழைத்துவரும் வழிகாட்டிகள் (guides), அருங்காட்சியகத்திலுள்ள ஊழியர்கள் சிலருக்கு லஞ்சம் கொடுத்து விட்டு, ஒரே ஒரு டிக்கெட்டைக் காட்டி ஒரு குழுவையே அருங்காட்சியகத்துக்குள் அனுமதிப்பது போன்ற மோசடிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதேபோல, நாளொன்றிற்கு 20 சுற்றுலாப் பயணிகள் குழுக்கள், முழுமையாக பணம் செலுத்தாமலே அருங்காட்சியகத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்கள்.

அருங்காட்சியக ஊழியர்கள் சிலருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதால், அவர்கள் இவர்களை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளார்கள்.

அவ்வகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மோசடி நடைபெற்றுவந்துள்ளது. அதன் காரணமாக, அருங்காட்சியகத்துக்கு சுமார் 10 மில்லியன் யூரோக்கள் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மோசடி தொடர்பில், அருங்காட்சியக ஊழியர்கள், வழிகாட்டிகள் உட்பட 9 பேரை அதிகாரிகள் தற்போது கைது செய்துள்ளார்கள்.

அந்த மோசடி கும்பலிடமிருந்து, ஒரு மில்லியன் டொலர்கள் ரொக்கம், வங்கிக்கணக்கிலிருந்து 500,000 டொலர்கள், மூன்று வாகனங்கள் முதலானவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அவர்கள் மீது மோசடி, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை முதலான பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட உள்ளன.