டில்வின் சில்வாவின் இந்திய விஜயம் கட்சி சார்ந்தது – அமைச்சர் விஜித ஹேரத்

9 0

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவின் இந்திய விஜயம் கட்சி சார்ந்ததாகும். அது குறித்து அரசாங்கத்தால் எவ்வித அறிக்கையும் வெளியிடப்பட மாட்டாது என பதில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (17) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியல் கட்சிகளுக்கு வெ வ்வேறு நாடுகளிலிருந்து அழைப்பு விடுக்கப்படுவது சாதாரணமானதாகும். ஆளுங்கட்சியானாலும், எதிர்க்கட்சியானாலும் எந்த நாட்டிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டாலும் அந்த அழைப்பினை ஏற்று அவர்கள் அந்நாடுகளுக்கு விஜயம் செய்வார்கள்.

அவர்களுக்கான ஏற்பாடுகளை அந்தந்த நாடுகள் வழங்கும். மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் (ஜே.வி.பி.) இந்திய வெளிவிவகார அமைச்சின் அழைப்பிற்கமையவே அந்நாட்டு விஜயம் செய்திருந்தார். அது கட்சிசார் விஜயமாகும்.

அந்த அடிப்படையிலேயே கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் குறித்த விஜயம் தொடர்பான ஊடக அறிக்கையையும் வெளியிட்டிருந்தது. எனவே அரசாங்கம் இது குறித்த அறிக்கையை வெளியிடாது என்றார்.