பாழடைந்த கிணற்றில் விழுந்து காட்டு யானை உயிரிழப்பு

11 0

மொனராகலை, தணமல்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கித்துல்கொட்டே, நெலுவயாய பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் விழுந்து காட்டு யானையொன்று உயிரிழந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்றுள்ளது.

குறித்த காட்டு யானை கடந்த சில நாட்களாக அப்பகுதியில் நடமாடிக் கொண்டிருந்த நிலையில், இவ்வாறு கிணற்றில் விழுந்து உயிரிழந்து கிடப்பதை பிரதேசவாசிகள் கண்டுள்ளனர்.

சுமார் ஏழு அடி உயரமான இந்த யானை, 20 வயதுடையது எனத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், குறித்த கிணறு சுமார் 30 அடி ஆழமான குறுகிய கிணறு எனவும் கூறப்படுகிறது.

யானையின் உயிரிழப்பு தொடர்பான மரண பரிசோதனைகளை உடவலவ ‘அலி அத்துரு செவன’ (யானைகள் சரணாலயம்) கால்நடை மருத்துவ அதிகாரி மேற்கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கித்துல்கொட்டே வனஜீவராசிகள் அலுவலகத்தினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.