பிரதமர் நரேந்திரமோடிக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

394 0

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு 3 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு மூன்று ஆண்டு நிறைவடைந்ததையொட்டி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தின் விபரம்:-

பிரதமராக மூன்று ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்காக உங்களுக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். உங்களது திறமை மற்றும் செயல்திறன் மிகுந்த தலைமையின் கீழ் இந்தியா மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது.

தமிழக அரசுக்கு நீங்கள் அளித்து வரும் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுக்கு இந்த மகிழ்ச்சியான நேரத்தில் எனது நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நீங்கள் தொடர்ந்து சேவை ஆற்றுவதற்காக நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.