மலையக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள முன்பள்ளி பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்று மத்திய மாகாணத்திற்கு கீழ் கொண்டுவரப்பட வேண்டுமென முன்பள்ளி ஆசிரியர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கொட்டகலையில் சனிக்கிழமை (14) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே குறித்த ஒன்றியம் இந்த கோரிக்கையை முன்வைத்தது.
இது தொடர்பாக ஒன்றியத்தின் தலைவர் யோகேஸ்வரி கருத்து தெரிவிக்கையில்,
மலையக பெருந்தோட்ட பகுதிகளில் இந்த முன்பள்ளி பாடசாலைகளை சுமார் 20 வருடங்களாக நடாத்தி வருகிறோம். அரசாங்கத்தின் ஊடாக கிடைக்கும் வளங்கள் எதுவும் எமக்கு கிடைப்பதில்லை.
மலையகத்தில் உள்ள மாணவர்களை கல்வித்துறையில் முன் கொண்டுவரப்பட வேண்டும் என்ற நோக்கில் செயற்பட்டு வருகிறது தோட்டப் புறங்களில் எமது செயற்பாட்டை முன்னெடுக்க பாரிய சவாலாக இருக்கிறது.அதில் ஒன்றுதான் தோட்ட நிர்வாகங்கள் தடையாக இருந்து வருகிறது.
எமது முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கம் இதற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இதன் போது இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த முன்பள்ளி ஒன்றியத்தின் பணிப்பாளர் மைக்கல் ஜோக்கியம் தெரிவிக்கையில்,
மலையக மக்களுக்கு அங்கிகாரத்தை வழங்கிய அரசாங்கத்திற்கு நாங்கள் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம் இன்று எல்லோரும் காணி சம்பந்தமாக பேசுகிறார்கள். ஆனால் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் நூற்றுக்கு எழுபது வீதமானோருக்கு முன்பள்ளியில் கற்றல் செயற்பாடுகள் கிடைப்பதில்லை. 30 வீதமானோருக்கு மாத்திரம் முன்பள்ளி கல்வி கிடைக்கிறது.
இந்த நாட்டில் முன்பள்ளி கல்வி என்பது மாகாண சபையின் கீழ் காணப்படுகிறது. முன்பள்ளி எந்த பகுதியில் இடம் பெற்றாலும் அது மாகாணசபை அதிகாரத்திற்கு கீழ் உள்வாங்கப்பட வேண்டும்.தோட்ட பகுதிகளில் இயங்குகின்ற முன் பள்ளிகளுக்கு தோட்ட நிர்வாகம் தடை விதித்து வருகிறது.
ரதெல்ல மற்றும் பல பகுதிகளில் முன் பள்ளிகள் மூடப்பட்டு காணப்படுகின்றன. முன்பள்ளி கல்வி அரசாங்கத்தின் ஊடாக அங்கீகரிக்கப்பட்டுள்ள போதிலும் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள முன்பள்ளி கல்வியும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
முன்பள்ளி கல்விக்கு தடையாக இருக்கின்ற தோட்ட நிர்வாகம் மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் மனிதவள பெருந்தோட்ட அபிவிருத்தி நிறுவனங்கள் ஆகியன தடையாக இருப்பதை இடைநிறுத்த வேண்டும்.
எனவே இது தொடர்பாக முன்பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் அனைவரும் இணைந்து எதிர்வரும் 22ம் திகதி அட்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளோம் என்றார்.

