‘விஜய்யை பார்த்துதான் திமுகவை அண்ணா ஆரம்பித்ததாக கூட அவர் சொல்வார்’’ என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கிண்டலாக கூறினார்.
மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த துணை முதல்வர் உதயநிதி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழக அரசு மகளிர் உதவித் தொகை ரூ.5 ஆயிரம் கொடுத்தது குறித்து என்னிடம் பெண்கள் பலரும் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் நன்றி சொல்ல சொன்னார்கள். மேலும், முதல்வரை ‘அப்பா’, ‘அண்ணன்’ என உறவாக குறிப்பிட்டு நன்றி சொல்லுங்கள் என கூறினர்.
மகளிர் உதவித் தொகை தாக்கத்தை நீங்கள் மக்களிடமே கேளுங்கள். அவர்களே கருத்து சொல்வார்கள். மதுரையிலும் பெண்கள் பலரும் என்னிடம் நன்றி கூறினர். மொத்தத்தில், யார் என்ன சொன்னாலும் நமது முதல்வர் சொன்னபடி செய்து வருகிறார்” என்றார்.
விஜய் கூட்டங்களில் உயிரிழப்பு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “இதை என்னிடமா கேட்க வேண்டும்? இதற்கு யார் பொறுப்பேற்று யார் பதில் சொல்ல வேண்டும்” என்று பதில் கேள்வி கேட்டார்.
மேலும், தான் அரசியலுக்கு வந்த பின்னர்தான் திமுக திட்டங்களை அறிவிப்பதாக விஜய் கூறுவது குறித்து கேட்டதற்கு, “‘திமுக கட்சியே விஜய்யை பார்த்துதான் அண்ணா ஆரம்பித்ததாக கூட அவர் சொல்வார்” என்று உதயநிதி சிரித்தப்படியே பதிலளித்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
விஜய் கூறியது என்ன?
முன்னதாக, “புதிதாகக் கோடைக் காலச் சிறப்புத் தொகை ரூ.2000 எனத் திடீரென அறிவித்தது எப்படி? ஒட்டுமொத்த மகளிரின் விசில் சின்னத்திற்கான பேராதரவு அலையைக் கண்டு உண்டான அச்சம் மட்டுமே இதற்குக் காரணம். திமுக தனக்குப் போட்டியாகக் கருதுவதும், தன்னை வெல்லப் போகும் ஒரே மக்கள் சக்தி எனக் கருதுவதும் தவெகவைத் தான் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தின் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி செய்துள்ளார்” என்று தவெக தலைவர் விஜய் கூறியது குறிப்பிடத்தக்கது.

